கோவில்பட்டி யூனியன் சேர்மன் தேர்தலில் தி.மு.க. வசம் 11 கவுன்சிலர்கள் இருந்தும் கடைசி நேரத்தில் கவுன்சிலர் அன்புக்கரசியை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது அ.தி.மு.க. ஆனாலும், சேர்மன் பதவிக் கான மெஜாரிட்டிக்கு 10 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று இருந்தபோது, அ.தி.மு.க. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வசம் 9 பேர்தான் என்று இருந்தபோது, 10-வது நபர் எப்படி உள்ளே வந்தார்? என்று கொதிக்கின்றனர் தி.மு.க.வினர். அன்புக்கரசி விலை போனதற்கும், 10-வது நபர் திடீரென உள்ளே வந்ததற்கும் மாவட்ட மேலிடமே காரணம் என்று குற்றம் சுமத்துகிறார்கள் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. உ.பி.க்கள்.

Advertisment

cc

""அன்புக்கரசி 15 ’எல்’ டீலிங்கில் அ.தி.மு.க.வின் பக்கம் தாவியிருக்கிறார். கீதாஜீவனின் கஸ்டடியிலிருந்தவர் எப்படி அணி மாறினார்? அதே போன்றுதான் இன்னொரு கவுன்சிலரும் அ.தி.மு.க.வுக்கு ரகசியமாக வாக்களித்துவிட்டு தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு நாங்கள் 10-தான் மெஜாரிட்டி என்கிறார்கள். மாவட்ட தி.மு.க. இடம் கொடுக்காமல் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை'’என்று சொல்லும் உடன்பிறப்புகள், அதற்கேற்ப நடந்தவற்றை மேற்கோள் காட்டுகிறார்கள்.

லோக்கல் அமைச்சர் கடம்பூர் ராஜு தரப்பிலிருந்து, கோவில்பட்டி யூனியனை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக் கிறார்கள். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் வெளிப் பார்வைக் குத்தான் கீரியும் பாம்பும் மாதிரி. ஆனால் உள்ளுக்குள் ரகசிய உடன்பாடு இருக்கிறது. இந்த மாவட்டத்தின் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் பகுதிகளின் மணல் குவாரிகளை ஆளுபவர்கள் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள். மொத்த குவாரி மணலும் அவர்கள் வசம். அந்தக் கொள்ளை பற்றி வெளியே எதிர்க்கட்சியான தி.மு.க. பேசிவிடக்கூடாது என்பதற்காக அங்குள்ள அயன் வடமலாபுரம் மணல்குவாரியைக் கொடுத்திருக்கிறார்கள். அதனாலேயே தி.மு.க. மணல் கொள்ளை பற்றியும் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளைப் பற்றியும் பேசுவதில்லை.

Advertisment

அந்த அடிப்படையில்தான் கட்சியைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். முழுக்க முழுக்க மாவட்டத்தின் செயல்பாடுகளால்தான் யூனியன் பறிபோனது''’’என்று பொருமு கிறார்கள்.

நாம், இது குறித்து விளக்கம் கேட்பதற்காக கீதாஜீவனை பலமுறை தொடர்புகொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவரது உதவியாளரைத் தொடர்புகொண்டு, அவரிடம் அனைத்தையும் தெரிவித்தபோது அதனை மறுத்தார்.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்